Translate

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் “ஆன்லைன்” மூலம் பதிவு செய்யும் வழிமுறைகள்


வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்படும் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களும் ஆன்லைன் வழியாக ஒருங்கிணைக்கப்பட்டு www.tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இணைய தளத்தில் புதிய மனுதாரர்கள் கல்வித்தகுதி பதிவு, புதுப்பித்தல், கூடுதல் கல்வித்தகுதிகளை ஆன்லைன் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்கள், பட்டதாரிகள் நலன் கருதி உருவாக்கப்பட்டுள்ள இந்த இணைய தளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் தங்கள் கல்வித் தகுதிகளை பதிவு செய்தால் கால விரயம், அலைச்சல், பணச்செலவினை மிச்சப்படுத்தலாம்.

தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக மனுதாரர்கள் புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் கல்வித் தகுதிகள் ஆன்லைன் வழியாக பதிவு செய்து, அடை யாள அட்டை மற்றும் வேலை வாய்ப்பு பதிவு எண் பெற்ற மனுதாரர்கள் மீண்டும் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தங்களது கல்வி சான்றினை அனுப்ப தேவையில்லை.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய 16 மாவட்டங்களைச் சேர்ந்த மனுதாரர்கள் சென்னை சாந்தோமில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வரத்தேவையில்லை.

தாங்கள் சார்ந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலோ, வீட்டில் உள்ள கம்ப்யூட்டரிலோ, இண்டர்நெட் மையங்களிலோ, புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் கல்வித்தகுதி பதிவு ஆகிய பணியினை மேற்கொள்ளலாம்.

மனுதாரர்களின் அடையாள அட்டை தொலைந்து போக நேரிட்டால் தங்கள் பதிவெண்ணை பயன்படுத்தி அடையாள அட்டையினை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யும் மனு தாரர்களுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கப்படும்.

ஆன்லைன் பதிவு செய்வோரும் உடனடியாக அடையாள அட்டை பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம். மனுதாரர் விரும்பினால் பதிவெண்ணை மட்டும் "சேவ்" செய்துகொண்டு தேவைப்படும்போது பதிவட்டை எடுத்துக் கொள்ளலாம். கூடுதல் கல்வித்தகுதி பதிவு செய்ய விரும்புவர்கள் தமிழ்நாடு வேலைவாய்ப்பு இணைய தளத்தில் "அப்டேட் டிரோபைல்" சென்று "சேவ்" செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டுமே இடமாற்றம், முகவரி மாற்றம் இருந்தால் மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். பிற மாவட்டங்களுக்கு மாறி சென்றால் அதற்கு ஆன்லைனில் முகவரி மாற்றம் செய்ய இயலாது. நேரில்தான் வரவேண்டும்.

மாவட்டத்திற்குள் முகவரி மாற்றம் செய்ய வேண்டுமானால் ரேஷன் கார்டு எண்ணை மட்டும் குறிப்பிட வேண்டும். உலகின் எந்த மூளையில் இருந்தும் பதிவை புதுப்பித்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம். இந்த வசதியை மனுதாரர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.